மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவி பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி வயது 12. இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள முத்தாளம்மன் குளத்தில் விளையாடிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த விஸ்வஜோதியுடன் அவரது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகியோரும் குளத்தில் இருந்தனர்.
இதில் விஸ்வஜோதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். மேலும் குளத்தில் இருந்தவர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் 8ம் வகுப்பு படித்து வரும் சபரீஸ்வரன் (13) அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த நிலையில் உடனே குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனாலும் விஸ்வ ஜோதி நீரில் மூழ்கி விட்டதால் தேவதர்சினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகிய இருவரையும் பிடித்து இழுத்து வந்து மீட்டுள்ளார். அதன் பிறகு தான் அனைவரும் சப்தம் போடவே அருகில் உள்ள அவரின் உறவினரின் உதவியுடன் விஸ்வஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் சரியான நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.