செம்மண் முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதி கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். இந்த ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பியுமான பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012- ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது லோகநாதன் இறந்து விட்டார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை (செப்.7) வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்துள்ளனர். ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியலர் குமாரபாலன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, எம்.பி. பொன். கௌதமசிகாமணிக்கு நிலத்தை குத்தகைக்கு தந்த புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் கண்ணன் மட்டும் தங்கள் சாட்சியத்தை பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் மனுதாக்கல்: இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதி கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞர் சீனிவாசன் இந்த மனுவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அளித்தார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்படும்போது பொன்முடி ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத நிலையில் முறையாக விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் 2021-இல் திமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடி இடம் பெற்ற பிறகு, இந்த வழக்கு விசாரணை வேகம்பெற்றதோடு, அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும். நேர்மையான முறையில் அவர்கள் சாட்சியமளிக்க முடியாது. எனவே நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் அரசுத் தரப்புக்கு உதவியாக நாங்களும் விசாரணை நடத்த எங்களும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.