2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இரண்டு நாள்களில் தொடங்கவுள்ளது.
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள், காணும் பொங்கலையொட்டி தொடர் அரசு விடுமுறை உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. இதற்காக சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். இதில், ரயில் பயணத்திற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கப்பட உள்ளது.
இதையும் படிக்க | நான் பலியாடு ஆகிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்
ஜனவரி 11 ஆம் தேதி(வியாழக்கிழமை) ரயிலில் பயணிக்க செப். 13 ஆம் தேதி(வருகிற புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது.
ஜனவரி 12 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிக்க செப். 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி(சனிக்கிழமை) பயணிக்க செப். 15 ஆம் தேதியும்
பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 14 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப். 16 ஆம் தேதியும், பொங்கலன்று ஜனவரி 15 ஆம் தேதி(திங்கள்கிழமை) பயணிக்க செப். 17 ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.