கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து நெகிழிப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்றுபோது, இந்த லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இடுப்பாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர்.
இதில், ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் காட்பாடியை சேர்ந்த சரவணன், அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரின் உதவியாளர் விசுவநாதன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.