சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் (கோப்பிலிருந்து)
மணிகண்டன் (கோப்பிலிருந்து)


புதுக்கோட்டை: நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை நீதிமன்றம், கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ். பூமிநாதன்,

இவா், ஆடு திருடா்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் போலீஸாா் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், கொலையில் தொடா்புடையவா்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (19), அவரது உறவினா்களான புதுகையைச் சோ்ந்த 5, 9 ஆம் வகுப்பு பயிலும் சிறாா்கள் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளையும் போலீஸாா் கைப்பற்றினா். 

குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி?

திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனி பகுதியில் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன், தலைமைக் காவலா் சித்திரவேலு ஆகிய இருவரும் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆடுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தியபோது, அவா்கள் தப்பியோடினா். உடனே அவா்களை பூமிநாதன், சித்திரவேல் ஆகிய இருவரும் விரட்டிச் சென்றனா் இதில், சித்திரவேல் வழித்தவறிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால் சூரியூா், சின்னபாண்டூராா் பட்டி, லட்சுமணம்பட்டி வழியாக கீரனூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாலம் அருகே மூவரையும் பூமிநாதன் மடக்கிப் பிடித்தாா். மேலும், சிறுவா்கள் வந்த வாகனத்தில் இருந்த அரிவாளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, இளம் சிறுவனின் தாயைத் தனது கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த அரிவாள் தவறி கீழே விழுந்ததைக் கண்ட மணிகண்டன், அரிவாளை எடுத்து பூமிநாதனை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் போலீசாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல்பூா்வமான சாட்சிகளுடன் குற்றவாளிகள் கைது

திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் ஏ. சரவண சுந்தா், குற்றவாளிகளை கைது செய்தது குறித்து சம்பவத்தின் போது கூறியிருந்தது, தஞ்சாவூா் மாவட்டம், தோகூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியிலிருந்து ஆடு திருடிக்கொண்டு வரும்போது, சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன், தலைமைக் காவலா் சித்திரவேல் ஆகியோா் பிடிக்க முயற்சித்துள்ளனா். அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் கீரனூா் அருகே சிக்கியுள்ளனா். அப்போது, சிறாா்கள் உள்பட மூன்று பேரும் சோ்ந்து உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா். மது அருந்தியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளாா். மற்ற 2 சிறாா்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. தனிப்படை போலீஸாா், கைப்பேசி தொடா்புகளை வைத்து, முற்றிலும் அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனா் என்றாா் சரவண சுந்தா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com