சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செப்.26ல் மீண்டும் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கடந்த மே 22-ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து குற்றவியல் நடுவா் மன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை வரும் செப். 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1: நேரில் காண வழிமுறைகள்!
இந்த நிலையில், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.