சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மனைவி சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வந்தனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு 2017-ஆம் ஆண்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90 % அளவுக்கு அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்புத் சட்டத்தின் கீழ் போலீஸாா் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளன. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டாா்.
இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும், அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனது மனைவியுடன் அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆஜராக வருகை தந்துள்ளார்.
அமைச்சா் பொன்முடி குற்றவாளி என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதால், அவா் சட்டப்பேரவை உறுப்பினா், அமைச்சா் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது.