பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கத்தை விட நான்கு மடங்கு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் பழைய பொருள்களை எரித்து போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.
பொங்கலையொட்டி சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு, பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அந்தவகையில் கோயம்பேடு சந்தையிலும் கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொங்கல் பொருள்களின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மல்லியின் விலை கிலோ ரூ.3,500க்கு விற்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி முல்லை ரூ.2,000-க்கும், ஜாதிமல்லி ரூ.2,100-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.160-க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180-க்கும், அரளி பூ 600-க்கும், சாமந்தி ரூ.120-க்கும் விற்பனையாகிறது.