போகி பண்டிகையையொட்டி பழைய பொருள்களை எரித்ததால், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காலை 6 மணிநேரம் நிலவரப்படி காற்று மாசு அளவு ஆலந்தூரில் 155ஆக அதிகரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பெருங்குடி 113 , கொடுங்கையூர் 94, மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, ராயபுரம் 82 என காற்றின் மாசு அதிகரித்துள்ளது.
பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் போகி கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே வீடுகளில் இருந்த பழைய பொருள்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் பல சென்னையின் இடங்களில் புகைமூட்டம் ஏற்பட்டது.
மாநகராட்சி திட்டம்
போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube) மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திட வேண்டும் எனவும், அதனை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.
அதன்படி பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.