பிப்ரவரி 1 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
நேற்று(29.01.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று(30.01.2023) காலை 8.30
மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 880 கீ.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது 31.01.23 மாலை வரை மேற்கு - வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும்.
இதன் காரணமாக,
30-01-2023: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
31-01-2023: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
01-02-2023: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.