சென்னை: தாம்பரம் மாநகர காவல்துறையின் முன்னாள் காவல் ஆணையர் எம். ரவி பெயரில் சமூக ஊடகங்கள் மூலமாக மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எம்.ரவி. இவர், தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து புதிதாக தாம்பரம் மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டபோது, தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வுக்குப் பின்னர் ரவி, சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். முக்கியமாக, உடற்பயிற்சி தொடர்பாகவும் இளைஞர்களை உத்வேகப்படுத்தும் நல்ல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இதனால் சமூக ஊடகங்களில் ஏராளமான இளைஞர்கள், காவல்துறையினர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ரவியின் புகைப்படத்தை வைத்து அவரது பெயரிலே போலியான கணக்கை உருவாக்கி ஒரு கும்பல் பண மோசடியில் இறங்கியுள்ளது.
மேலும், சமீபத்தில் அந்த மோடியில் ஈடுபட்ட நபர்கள், போலியான கணக்கு மூலம் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருள்களை வாங்கி உள்ளனர். அதை பணம் கொடுத்து வாங்குமாறு ரவிக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி, உடனடியாக இதுகுறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.