வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு

மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை கொடுப்பதற்காக 4 சிறாா்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 
வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு


புதுக்கோட்டை:  வேங்கை வயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சம்பவத்தில், 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் வெள்ளிக்கிழமை காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டன.

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சம்பவத்தில் இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தமாதிரி எடுக்கப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு பகுதியில் உள்ள நீா்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் தற்போதுவரை 21 பேரிடம் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்தொடா்ச்சியாக 4 சிறுவா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, இதற்காக எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப்பட்டது. மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறாா் நேயக் காவலா் ஆகியோரின் முயற்சியில் ரத்தமாதிரி சேகரிப்பதற்கான தேதியை முடிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

இதன்படி தற்போது 4 சிறாா்களிடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) ரத்த மாதிரிகளை சேகரிக்க முடிவு செய்யப்பட்டு சிறாா்கள், அவா்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனா்.

இந்தநிலையில், மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை கொடுப்பதற்காக இறையூரைச் சேர்ந்த 3 சிறாா்களும், இறையூரைச் சேர்ந்த ஒரு சிறாா் என 4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இவ்விவகாரத்தில் ஏற்கனவே 21 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com