

சென்னையை அடுத்த கிண்டியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை வரும் 15-ஆம் தேதி திறந்துவைக்கப்படவிருக்கிறது.
முன்னதாக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஜூன் 5-ஆம் தேதி சென்னை கிண்டி பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம் திறப்பு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில்தான், ஜூன் 15ஆம் தேதி மருத்துவமனை திறந்துவைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
எனினும், ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் விழாவில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் திறந்து வைக்க வாய்ப்பிருப்பதாக மூத்த திமுக தலைவர் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு அறிவித்தாா். அதன்படி, மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம், ஆறு தளங்களுடன் சுமாா் 51 ஆயிரத்து 429 சதுரமீட்டா் பரப்பில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மூலம் திறந்து வைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து நேரில் அழைப்பு விடுப்பதற்காக கடந்த வாரம் விமானம் மூலம் அவா் தில்லி சென்றார்.
குடியரசுத் தலைவா் மாளிகைக்குச் சென்ற அவா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவைச் சந்தித்தாா். ஜூன் 5ஆம் தேதி சென்னை கிண்டி பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையைத் திறந்துவைக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். தனது அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அப்போது நன்றியும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு முன்பே திட்டமிட்டது போல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 4ஆம் தேதி செர்பிய நாட்டுக்கு ஆறு நாள்கள் அரசு முறைப் பயணமாகப் புறப்பட்டுச சென்றார். இதனால், மருத்துவமனை திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பாரா என்பது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. எனவே, கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், செர்பியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் குடியரசுத் தலைவர், ஜூன் 15ம் தேதி தமிழகம் வருகை தர ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.