சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக அங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மேலும், தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த இரண்டு நாள்களாக அதிகளவில் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த 5 நாள்கள் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 30 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.