வட மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல பாஜக-அதிமுகவினர் திடீரென நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றாம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது அப்போதைய மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக வாய் மூடி மெளனியாக இருந்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்? திடீரென இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக தங்கள் வீடு செல்ல பயணச்சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முன்வந்த முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். அதனை அறிவித்ததும் நான் தான்.
அதைப்போலவே சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி, இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலம் செல்வதற்கு பேருந்து கட்டணம், ரயில் கட்டணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அறிவித்தார்கள் அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்கள்.
இந்த விவகாரத்தில் எங்கே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என்று அஞ்சி அந்த நிதி உதவியை அப்பொழுது ஏற்க மறுத்தவர்கள் தான் இந்த மத்தியில் ஆளும் பாஜக அரசும், அப்போதைய அதிமுக அரசும்.
தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்ற பல வட மாநில தொழிலாளர்கள் போகிற வழியிலேயே பசியாலும் பட்டினியாலும் இறந்து போனார்கள். அப்பொழுது கூட பாஜகவும் மோடியும் எந்தவிதமான கரிசனமும் காட்டாமல் கல்நெஞ்சக்காரர்களாக இருந்து வேடிக்கை பார்த்தார்கள்.
ஆனால், இன்று திடீரென வட மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல பேசுகிறார்கள். இவர்களுடைய போலி வேடம் தமிழக மக்களிடையே எடுபடாது. தோல்வியடையும்.
இங்கே நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான் என அழகிரி கூறியுள்ளார்.