அமைச்சா் வி. செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருப்பவா் வி .செந்தில் பாலாஜி. இவா் கரூா் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறாா். இவா் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்த செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்த போது மீண்டும் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரா் அசோக்குமாரின் வீடு, அவரது உதவியாளா் காளிபாளையம் பெரியசாமி, ராயனூரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளரும் கரூா் மாநகராட்சி துணை மேயருமான தாரணி சரவணன் மற்றும் கொங்கு மெஸ் மணி, ஒப்பந்ததாரா் எம்.சி. எஸ். சங்கரின் அலுவலகம் உள்பட 10 இடங்களில் சென்னை வருமான வரித்துறை ஆணையா் தலைமையில் கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 150 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
கரூரில், அமைச்சா் வி. செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா்கள் வீடுகள் உள்பட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பெண் அதிகாரியிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையும் படிக்க: தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கை
இந்நிலையில் இன்று கோவையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும், பொள்ளாச்சி அருகே தம்மம்பதி கிராமத்தில் அமைச்சரின் நண்பர் அரவிந்த் பண்ணை வீட்டிலும், பொள்ளாச்சி பனப்பட்டி பகுதியில் அமைச்சரின் உறவினர் சங்கர் ஆனந்த் என்பவரது கல்குவாரியிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.