அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

News image
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஶ்ரீ சிவகாமி அம்மன் கோயில் தேரோட்டம்.
Updated On :7 நவம்பர் 2023, 6:01 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.31-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் அக்.31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.  செவ்வாய்க்கிழமை (நவ.7-ம் தேதி) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளி மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நவ-8ம் தேதி புதன்ழமை மாலை 5 மணிக்கு மேல் சிவகாமசுந்தரி அம்மனின் பட்டு வாங்கும் உற்சவம் நடராஜர் சந்நிதியில் நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மன் சந்திதியில் பூரச்சலங்கை உற்சவமும், நவ.9-ம் தேதி வியாழக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.