Enable Javscript for better performance
சமூகநீதியின் தலைநகரம் பிகார்: பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சமூகநீதியின் தலைநகரம் பிகார்: ராமதாஸ் புகழாரம்!

    By DIN  |   Published On : 07th November 2023 07:12 PM  |   Last Updated : 07th November 2023 07:15 PM  |  அ+அ அ-  |  

    ramadoss_pmk

     

    நாட்டிலேயே முதல்முறையாக பிகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதையும், தற்போது இட ஒதுக்கீட்டினை அதிகரிப்பதாக அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டு, 'சமூகநீதியின் தலைநகரம் பிகார்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பிகாரில் இட ஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது; தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்!

    பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிகார் மாநிலத்தின் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டில் இருந்து 65% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

    பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 விழுக்காட்டில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. பழங்குடியினர் இட ஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிக்க: நாட்டிற்கு எக்ஸ்-ரே போன்றது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

    பிகார் மாநில அரசின் முடிவு பாராட்டப்பட வேண்டியது. சமூகநீதியின் தலைநகரம் பிகார் தான் என்பதை அம்மாநில அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. மாநில அரசுகள் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவெடுக்கவோ எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், பிகார் அரசின் இந்த முடிவுகளை செயல்படுத்த சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை.

    மாநில அரசுகள் நடத்தும் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், பிகார் அரசு சமூகநீதிப் பயணத்தில் புரட்சிகரமான மைல்கல்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    பிகார் அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகும் தமிழக அரசு தானாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப் போகிறதா? அல்லது அந்தப் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு சமூக அநீதி இழைக்கப் போகிறதா? என்பது தான் இப்போது நம்முன் உள்ள வினா ஆகும்.

    பிகாரில் 63% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு இதுவரை 30% ஆக இருந்து வந்த நிலையில், இனி அது 43% ஆக உயர்த்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

    ஜாதிவாரி கணக்கெடுப்பும், அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு அதிகரிப்பும் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் நடந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்ட தமிழக அரசு, நான்காவது அல்லது ஐந்தாவது மாநிலமாகவாவது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    இதையும் படிக்க: நவ.15-இல் ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

    அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

    பிகாரைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தால் இக்கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp