வேதாரண்யம்: கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த நான்கு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலையம்மாள். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மதியம் (அக்.6) மீனவர் மணியன், வேல்முருகன், சத்யராஜ், கோடிலிங்கம் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழக மீனவர்.
மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் நாட்டிகல் மையில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இரவு 8.30 மணியளவில் 1 படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் தமிழக மீனவர்களான மணியன், கோடிலிங்கம் ஆகியோருக்கு வெட்டு காயமும், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய இரண்டு பேருக்கு உள்காயமும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆட்சியர் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர்.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை
பின்னர், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, நான்கு நபர்களின் வெள்ளி அரைஞாண்கயிறு 4, ரூ.3 லட்சம் மதிப்பிலான வலை மற்றும் படகில் இருந்த சமையல் பொருள்களை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை (அக். 7) காலை 6.30 மணிக்கு வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு வந்தனர். அவர்களை சிகிச்சைக்காக, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களை ஆட்சியர் வர்கீஸ் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.