
strike075024
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 63 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஓராண்டாக முன்வைத்து வந்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான காரணம்பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தொழில் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி இன்று முதல் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிக்க..கரோனாவைவிட கொடூரமான வைரஸ்.. எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்
அதன்படி, தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்களும், கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளன.
தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தங்களின் கோரிக்கை தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழில்துறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...