திரைப்படங்களில், ஒரு முக்கியமான காட்சியில், கதாநாயகனோ அல்லது நாயகியோ ஒருவரை தொலைபேசியில் அழைக்கும்போது 'நாட் ரீச்சபள்' என்று ஒலிக்கும். அப்போது திரைப்படத்தில் நடிப்பவர்களும் சரி படத்தைப் பார்ப்பவர்களும் சரி உச்சக்கட்ட பதற்றத்தில் இருப்பார்கள்.
அதுபோன்ற நிகழ்வுதான் கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நாள்தோறும் காணும் காட்சியாக உள்ளது. காரணம், இந்த கிங் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் மோசமான தொலைத்தொடர்பு சேவைதான் என்கிறார்கள் மக்கள்.
கடந்த ஆண்டு ஆயிரம் படுக்கை வசதியுடன் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. நாள்தோறும் 1200 புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள். 400 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். சுமார் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவமனை அமைந்துள்ளது. ஆனால், எப்போது பார்த்தாலும் செவிலியரோ அல்லது மருத்துவமனை ஊழியரோ அதிவேகமாக மருத்துவரை அழைக்க மாடிக்கு மாடியும், மாடியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஓடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. காரணம், மருத்துவமனைக்குள் இன்டர்காம் தொலைபேசி சேவை இன்னும் முடிக்கப்படவில்லை. மருத்துவமனைக்குள் மொபைல் ஃபோன் சிக்னல் பூஸ்டர்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால், மொபைல் டவர் பொறுத்தும் பணி மட்டும் முடியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்கிறது.
பொதுவாக மருத்துவமனைகளில், ஒரு நோயாளிக்கு உடல்நிலை மோசமடைந்தால், உடனடியாக இன்டர்காமிலோ அல்லது மருத்துவரின் மொபைலிலோ அழைப்பார்கள். ஆனால், இங்கே நிலைமை தலைகீழ். செல்போன் அழைப்பும் போகாது. நாட் ரீச்சபிள் தான் வரும் என்பதால், செவிலியர்கள்தான் ஓடிச்சென்று மருத்துவரை கையோடு அழைத்து வர வேண்டும் என்ற நிலை உள்ளது.
ஒருவேளை, நோயாளியுடன் இருக்கும் நபர் ஏதேனும் தேவை என்றால் கூட, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துதான் செல்ஃபோனில் பேச முடியும். அதுவரை நோயாளியின் நிலை? சரி. மருத்துவமனைக்குள் இருக்கும் யாருக்காவது வெளியிலிருப்பவர்கள் பேச முடியுமா என்றால் முடியும். அவர்கள் நேரில் வந்தால் பேசலாம். மற்றபடி செல்ஃபோனில் பேசுவது என்பது இயலாத காரியம்.
ஐசியுவிலும் இதே நிலைதான். இந்த பிரச்னையால் நோயாளிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்றுதான் அங்கிருக்கும் அனைவருமே வேண்டிக்கொள்கிறார்கள்.
வோடஃபோன் டவர் அமைத்துவிட்டார்கள், ஏர்டெல் டவர் அமைக்கும் பணி முடியவில்லை. ஜியோ ஃபைபர் பொறுத்தப்படவில்லை. இன்டர்காம் தொடர்பு விரைவில் ஏற்படுத்தப்படும். இது தான் இன்றைய மருத்துவமனையின் நிலை.
கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனை இதுவரை பல முக்கிய அறுவைசிகிச்சைகளை செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனால், நோயாளிகளும், மருத்துவர்களும் உடன் இருப்பர்களும்தான் இந்த தொலைத்தொடர்பு பிரச்னையால் நாள்தோறும் செத்து செத்துப் பிழைக்கிறார்கள் என்கிறார்கள் அங்கு வரும் பார்வையாளர்கள்.
இது விரைவில் ரீச் ஆனால் அனைவருக்கும் நல்லது.