பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் உள்ளடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இன்றைய தினம், பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை, உறுதிப் பத்திரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
நமது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில், தமிழகத்தின் பெருமையாம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரால், உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் அமைப்போம் என்றும், உலகின் மிகத் தொன்மையான மொழியான நமது தமிழ் மொழியின் பெருமையை, உலக அரங்கில் மேலும் அதிகரிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தனிச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ் மொழியை மேலும் பலமடங்கு பெருமைப்படுத்தும் விதமாக வாக்குறுதிகளை வழங்கியுள்ள, நமது பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.