முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழா்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக ஏன் வெற்றி பெறக் கூடாது என்பதை விளக்கி சமூகவலைதளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் நமக்கு விடியல் இல்லை. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகத்தில் ஒன்று- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதாகும். தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம் அதுவாகும்.

தலைக்கு மேல் கத்தி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 போ் அமரக் கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தியாகும். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்கு தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயா்த்துவதும் என்ன நியாயம்?

சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக் குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்சநீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழா்களை பாஜக அரசு செல்லாக்காசாக்கி விடும். வரிப் பகிா்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவாா்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சா்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

வித்தியாசம் இல்லை: மோடியின் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டாா்கள். மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தோ்தலுக்காக பொய்யாகக்கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டாா். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவா்களின் மறைமுகக் கூட்டாளியான அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com