
கும்பகோணம்: திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் போற்றப்படுகிறது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்.
இக்கோயிலில் தை முதல் நாளில் தைத் தேரோட்டமும், சித்திரை பெளர்ணமியில் சித்திரை பெரியத் தேரோட்டமும் நடத்தப்படும். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தேராக சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேர் திகழ்கிறது.
கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் உற்சவங்கள் நடைபெற்று வந்தன.
இந்தத் தேரோட்டத்துக்கான அலங்காரப் பணி மார்ச் 25 ஆம் தேதி தொடங்கியது. இந்தச் சித்திரைப் பெரிய தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்னர் 450 டன்னை எட்டியுள்ளது.
தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்று விட்டம் 28 அடியும் உடையது. தேர் அலங்காரத்துக்கு பின் ஒட்டுமொத்த உயரம் 110 அடியை எட்டிய இத்தேர் ஆடி அசைந்து வருவது தனி அழகுதான்.
இத்தேரில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.