தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவை மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாள்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.