தேவையின்றி மதிய வேளையில் வெளியே செல்ல வேண்டாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பு அளவை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசிய பணிகள் இல்லாமல் மற்றும் தேவையின்றி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெயில் நேரத்தில் உடல் சோர்வு ஏற்பட்டால் மக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் கே.எம். சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.24) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரைஅதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும் இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 சதவீதம் ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-85 சதவீதம் ஆகவும் இருக்கக்கூடும். இதனால் புழுக்கம் ஏற்படலாம்.
வெப்ப அலை முன்னெச்சரிக்கை: வட தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை (ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
நேற்று வெயில் எப்படி இருந்தது?
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சேலம் - 108.14, ஈரோடு - 107.6, திருப்பத்தூா் - 106, வேலூா், பரமத்தி வேலூா் - 106.7, மதுரை நகரம், தருமபுரி-105.8, நாமக்கல் - 104.9, திருச்சி - 104.18, மதுரை விமான நிலையம் - 103.82, திருத்தணி - 103.64, கோவை - 102.56, தஞ்சாவூா், பாளையங்கோட்டை- 102.2, சென்னை மீனம்பாக்கம் - 100.94.