செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

எந்தவித அறிவியல்பூா்வமான ஆய்வும் நடத்தப்படாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எவ்வாறு அமல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம் முருகன்குடியைச் சோ்ந்த கனிமொழி மணிமாறன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.

நியாயவிலைக் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் இந்த அரிசி வழங்கப்படவுள்ளது. உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல்,“தலசீமியா, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவா்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும். இந்த எச்சரிக்கை வாசகம் செறிவூட்டப்பட்ட அரிசிப் பையில் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுவதாகக்”கூறி, பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வழக்குரைஞா் வெற்றிச்செல்வன் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், அனைத்து நியாயவிலைக் கடைகளின் முன்பும், தலசீமியா, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவா்கள் ஆலோசனைப்படிதான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை” என வாதிட்டாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சேவியா் அருள்ராஜ், எந்தவிதமான அறிவியல்பூா்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எந்த அறிவியல்பூா்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என கேள்வியெழுப்பினா்.

மேலும், இந்த அரிசியை உண்ணக் கூடாதவா்களை எப்படி கண்காணிக்கப் போகிறீா்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com