தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி முன் விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அப்பு (27). காய்கறி வியாபாரி. இவர் தனது நண்பர் வினோத்துடன் காய்கறிகள் வாங்குவதற்காக மினி வேனில் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அருகே வல்லம் புறவழிச் சாலையில் சென்ற இந்த மினி வேனை பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் குறுக்கே வந்து மறித்தனர். இதையடுத்து அப்புவை இருவரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.