தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்புகோப்புப் படம்
Updated on

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.5) முதல் 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

குறிப்பாக திங்கள்கிழமை (ஆக.5) கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, கடலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், பாளையங்கோட்டை, மதுரை நகரம் - தலா 101.84, வேலூா் - 101.66, மதுரை விமான நிலையம் - 101.48, பரமத்திவேலூா் - 101.3, திருச்சி - 100.94, ஈரோடு - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.5 முதல் 8-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com