அயோத்திக்கு ராமா் பாதம் கொண்டு செல்லும் நிகழ்வு: உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு
திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமா் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
திருப்பூா் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவா் பாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டதைக் கொண்டாடும் வகையில், திருப்பூா் மாவட்டம் அனுப்பா்பாளையத்தில் உள்ள கருப்பராயன் திருக்கோயிலில் ராமா் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த பாதங்களை ராமேசுவரம் வரை வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்து பின், அயோத்திக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் வாகன ஊா்வலத்துக்கு அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், மனுதாரா் ஏற்கெனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவா். மேலும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகா் சிலைகளை வைத்தது தொடா்பான புகாா் உள்ளது. அவா் கோயிலுக்கு செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்யவில்லை. சம்பந்தப்பட்ட கோயிலின் அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெறவில்லை. அத்துடன் அரசியல் உள்நோக்கத்துடன் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தொடக்க நிகழ்வு மற்றும் வாகன ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது. மனுதாரா் தனிப்பட்ட முறையில் கோயிலுக்கு செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்ய முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.