
சென்னை புறநகர் ரயில் சேவை மேலும் 4 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த மாதம் முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்கமாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பணிகள் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாள்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆகஸ்ட் 15 முதல் 18 வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் - தாம்பரம்(06028), விழுப்புரம் - மேல்மருவத்தூர்(06726), மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை(06722), புதுச்சேரி - சென்னை எழும்பூர்(06026), சென்னை எழும்பூர் - புதுச்சேரி(06025), சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர்(06721), மேல்மருவத்தூர் - விழுப்புரம்(06725), தாம்பரம் - விழுப்புரம்(06027) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரத்துடனும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடனும் நிறுத்தப்படும்.
பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சில ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி பகல் 12 மணியில் இருந்து அனைத்து மின்சார ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்க தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்ட நாள்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.