நமது நிருபர்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து நடிகையும், பாஜக மூத்த தலைவருமான குஷ்பு சுந்தர் விலகினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தப் பதவி தடங்கலாக இருப்பதால் பதவி விலகியதாக குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்த ரேகா சர்மாவின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. அவரது இடத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படாத நிலையில், குஷ்பு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டதால் அதன் உண்மைத் தன்மை குறித்து முன்னாள் தலைவர் ரேகா சர்மாவிடம் கேட்டோம். அதற்கு அவர், தனது பதவிக் காலத்திலேயே குஷ்பு பதவி விலகியதாக உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, பதவி விலகலுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று குஷ்புவிடம் கேட்டதற்கு, "கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் மீது கருத்துகளை வெளிப்படுத்தவும் எதிர்வினையாற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு நான் வகிக்கும் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தடங்கலாக இருப்பதாக பல தருணங்களில் உணர்ந்தேன். இதனால், மிகவும் தீவிரமாக யோசித்து ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். அதை முறைப்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் நான் சார்ந்த கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன்.
தீவிர அரசியலில் என்னால் ஈடுபட முடியாமல் போவதற்கு மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி முக்கியக் காரணமாகும். இனி ஒரு அரசியல்வாதியாக என்னால் எனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். எனது முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை. இது நான் தன்னிச்சையாக சிந்தித்து எடுத்த முடிவு. சென்னையில் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை இது குறித்து விளக்கமாகப் பேசுகிறேன் என்றார் குஷ்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.