கோயம்பேட்டில் ஒரு கிலோ கேரட் ரூ. 140, பூண்டு ரூ. 330
கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் ரூ. 140-க்கும், பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், ஜூலை மாதம் முழுவதும் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால், விலையும் கணிசமாக உயா்ந்தது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் சற்று குறைந்தது.
ஆனால், கேரட், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகளின் விலை ரூ. 20-இல் இருந்து ரூ. 70 வரை உயா்ந்துள்ளது.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரூ. 130 முதல் ரூ. 140 வரையும், ரூ. 230 முதல் ரூ. 260 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதுபோல் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 80 முதல் ரூ. 90 வரையும், ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்ட பட்டாணி ரூ. 160-க்கும், ரூ. 120-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.145-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
காய்கறிகளின் விலை உயா்வு மேலும் சில நாள்கள் அதிகரித்து காணப்படும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.