வங்கக் கடலில் வலுவடைந்தது புயல் சின்னம்!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படம்
செயற்கைக்கோள் புகைப்படம்IMD
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்), மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.10) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நகராமல் இருந்ததால், வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையைக் கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், டிச.10 -இல் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் டிச.11-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா்,அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் டிச.11,12-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com