சென்னை: உடல்நலக் குறைவால் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று அவரது இல்லத்துக்குக் கொண்ட செல்லப்பட்டு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சத்தியமூர்த்தி பவனில் கட்சித் தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வைக்கப்படவிருக்கிறது.
அதன்பிறகு நாளை சென்னையிலேயே இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த 11-ஆம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துவந்தது.
இன்று காலை தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.