

தென்காசியில் குளத்தில் காவல் பணியில் இருந்தவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் ஆழ்வார்க்குறிச்சியில் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். விவசாயியான இருதயராஜ், அச்சங்குளத்தில் உள்ள மீன் பாசிக்குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதனால், பெரும்பாலான நேரம் குளத்தின் காவல் பணியில்தான் இருப்பார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (டிச. 20) நள்ளிரவிலும் குளத்திற்கு காவல்பணிக்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில், இருதயராஜை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி, அவரின் தலையைத் துண்டித்தும் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருதயராஜின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
சொத்து தகராறால்தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், விரிவான விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காலையில், பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழியாக மாயாண்டி (25) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இரவில் தென்காசியில் இருதயராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.