
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தாண்டு தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது, “குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.
ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். மு. க. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்” எனக் கூறியுள்ளார்.
இதே விவகாரத்தில், மத்திய அரசை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கண்டித்து விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.