சேலம்: மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை டார்வின் அறிவியல் மன்றம் நடத்திய அறிவியலை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவா்களிடையே உரையாற்றினாா்.
அப்போது அவா் பேசியது: மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும். மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவா்கள் பகுத்தறிவோடு சிந்திப்பது விஞ்ஞானிகளுக்கு இணையானது தான். வானவில் மன்றம் மூலம் 710 கருத்தாளர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அறிவியல், கணிதம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவா்களுக்கும் அறிவியல் சென்றடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆன்லைனில் எஸ்இடிசி டிக்கெட்: நீங்களும் வெல்லலாம் ரூ.10 ஆயிரம்
அனைவருக்கும் அறிவியல் மனப்பான்மை கொண்டுவர வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்றும் சந்திராயன் போன்ற விண்வெளி திட்டங்களில் அரசு பள்ளியில் படித்தவர்களின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இஸ்ரோ சென்ற ஆசிரியா்கள் வழிகாட்டியாக இருந்து தனது அனுபவங்களை மாணவா்களுக்கு வழங்க வேண்டும். கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமில்லாமல் அதற்கான காப்புரிமையை எவ்வாறு பெற வேண்டும் என்பதையும் ஆசிரியா்கள் மாணவா்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் தில்லி பாபு மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.