தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில் யானைகளில் சிறந்த பராமரிப்புக்காக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திற்கு(56) ஆன் ஆக்டிவ் எலிபன்ட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 2000 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் யானை மங்களம் (56) கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிபுரிந்து வருகிறது.
கோயிலில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் மங்களத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அனைத்து விழாக்களிலும் மங்களத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.இந்த மங்களம் யானை கோயிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது. குழந்தை போல் பழகும் குணம் கொண்டது. சுட்டித்தனம் வாய்ந்தது. மங்களம் யானை மற்றும் அதனை பராமரிக்கும் பாகன்களுடன் குறும்புத்தனம் செய்யும் பல விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி பெரும் வரவேற்பு பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில், தில்லி தன்னார்வ தொண்டு நிறுவன லோத் சந்திரா அவுர் ஜனதா சார்பில் தமிழகத்தில் 38 யானைகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் சிறந்த பராமரிப்புக்காக முதல் பரிசு பெற்றது.
இதனையடுத்து தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன்,அஜீத் குமார் ஆகியோர் மங்களம் யானை பராமரிப்பாளர் அசோக்விடம் நினைவு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளில் மிக வயதான யானை மங்களம். 56 வயதான யானையாக இருந்தாலும் சிறு குழந்தை போல் சுறுசுறுப்பாகச் செயல்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.