சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்கள்: சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை!

சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்களை கொண்டு சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான சைதைதுரைசாமியின் மகன் வெற்றி பயணித்த கார்.
ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான சைதைதுரைசாமியின் மகன் வெற்றி பயணித்த கார்.

சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்களை கொண்டு சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போனார். அவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் 8-வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னை நந்தனம் சிஐடி நகா் முதலாவது பிரதான சாலையில் குடும்பத்துடன் வசிக்கும் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). திரைப்பட இயக்குநராக உள்ளார்.

வெற்றி, தான் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தோ்வு செய்வதற்காக சில நாள்களுக்கு முன்பு விமானம் மூலம் ஹிமாசல பிரதேசத்துக்கு சென்றாா். அவருடன் அவரது நண்பா் திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத் (32) என்பவரும் சென்றாா்.

அங்கு அவா்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கஷாங் நாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சட்லஜ் நதி ஓடும் மலைப்பகுதியில் ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அந்த காரை ஓட்டி வந்த அப் பகுதியைச் சோ்ந்த தன்ஜின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலைப் பாதையில் சுமாா் 200 அடி உயரத்திலிருந்து கீழே உருண்டது. அந்த காா் 200 அடி பள்ளத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் விழுந்து, மிதந்தது.

உள்ளூா் போலீஸாா் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் காா் பள்ளத்தில் உருளும்போது காருடன் விழுந்த கோபிநாத், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா். உடனடியாக அவா், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு காா் ஓட்டுநா் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டாா்.

உள்ளூா் போலீஸாா், மீட்பு படையினரின் நீண்ட தேடுதலுக்கு பின்னரும் வெற்றி கிடைக்கவில்லை.  இதையடுத்து வெற்றியை மீட்பதற்காக தேசிய பேரிடா் மீட்பு படையினா், அங்கு வரவழைக்கப்பட்டனா். தேசிய பேரிடா் மீட்பு படையினா், உள்ளூா் போலீஸாருடன் வெற்றியை தேடும் பணியில் 8-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கீழ்பாக்கம் தடவியல் மருத்துவர்கள் சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இவை இரண்டையும் ஒப்பிட்டு பரிசோதனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com