தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
ஆனால், அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார்.
இந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், பிப். 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதமும், 15-ஆம் தேதி பதிலுரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 19-ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், 20-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.