நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழ்நாடு ஆளுநரின் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்தார்.
ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கிய ஆளுநர், அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் கூறி, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் கூட்டம் தொடங்கியபோது தமிழ்தாய் வாழ்த்து மட்டும் இசைக்கப்பட்டதை குறிப்பிட்டு தேசிய கீதம் புறக்கணிக்கப்படுவதாகவும், பேரவை தொடக்கத்தின் போதும், நிறைவின் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் பல பகுதிகளை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த ஆளுநர், “வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்” எனக் குறிப்பிட்டு மாநில அரசு தயாரித்த கொள்கை உரையை புறக்கணித்து இருக்கையில் அமர்ந்தார்.
இதையடுத்து, தமிழக ஆளுநருக்கு அரசு தயாரித்து கொடுத்த உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் வாசித்து வருகிறார்.
கடந்த மாதம் கேரள சட்டப்பேரவை கூட்டத்திலும் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிஃப் கான், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.