வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடியின் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சை துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச. 26ஆம் தேதி தெரியவந்தது.
இச்சம்பவத்தில் தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரியாக திருச்சியைச் சேர்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி இருந்தார்.
200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்ட சூழலில், அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அனுமதி கோரும் மனு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், விசாரணை அதிகாரி பால்பாண்டி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சைத் துணைக் காவல் கண்காணிப்பாளர் கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் பால்பாண்டி நீண்ட நாள்கள் விடுப்பில் இருந்து வந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர்.