அவிநாசி: அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தையடுத்து அந்த பகுதி மக்கள் புதன்கிழமை காலை பொதுக் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியிருப்பதாவது: அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம்
ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயில் எங்களில் பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.
இந்த கோயிலுக்கு அருகே வசித்து வரும் அதிமுக பிரமுகர் நடராஜ் தனது வீட்டுக்குச் செல்வதற்காக கோயில் வழித் தடத்தைப் பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், கோயில் அருகே நடப்பட்டிருந்த வேல் உள்ளிட்டவற்றை அவர் அகற்றி, அந்த பகுதியில் கல் ஒன்றை நட்டுவைத்து பொதுப்பாதையை அடைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
இது குறித்து அவிநாசி வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கோயில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், கோயில் மேற்கூரையும் அகற்றி விட்டார்.
இது குறித்து அந்த நபரிடம் கேட்டால் நீதிமன்ற உத்தரவுபடி பாதை எனக்கு சொந்தமானது என்கிறார். ஆனால் அந்தப் பாதையில் இருந்த பொது கிணறு ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொதுக் கிணறு நாங்கள் தோண்டி திறக்க உள்ளோம் என்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ள வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர்.