சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மதுரைக்காக மட்டும் 20 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று (பிப். 19) தெரிவித்துள்ளார்.
தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழில்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ளதாகவும் தமிழக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மதுரைக்கான அறிவிப்புகள்:
மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு
கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம்.
குமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, கோவை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்.
திருமங்கலம் - ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை, சென்னை, கோவையில் பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதிகள். அதற்காக ரூ.26 கோடி ஒதுக்கீடு.
மதுரை, சென்னை, சேலம், கோவை, திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி.
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமைத் திட்டம்.
மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 2024 - 2025ம் நிதியாண்டில் 24 மணிநேரம் தடையற்ற குடிநீர்த் திட்டம்.
மதுரையில் புதிய கல்லூரி மாணவர் விடுதி
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கீடு.
கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 20 அறிவிப்புகள் மதுரையில் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.