நாட்டின் அனைத்து தளங்களில் பெருவளர்ச்சி பெற்று தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
சுமார் 2.07 மணி நேரம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் அறிவித்தார்.
அப்போது, நாட்டின் அனைத்து தளங்களிலும் தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:
கடந்த 75 ஆண்டுகளில் சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டும் அடைந்தன. மற்ற சில மாநிலங்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக குறியீடுகளில் மட்டும் முன்னேற்றம் அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் என அனைத்து தளங்களிலும் முன்னேற்றம் அடைந்து தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது.
குறிப்பிட்டுச் சொன்னால்,
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதலிடம்
மின்னணுப் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதலிடம்.
புத்தொழில் சூழல் அமைவுக்கான முன்னணி மாநிலம்.
தொழிற்சாலைகளில் பங்கேற்கும் மகளிரின் பங்கு நாட்டிலேயே முதன்மை.
உயர்கல்விச் சேர்க்கையில் நாட்டில் முதலிடம்.
தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 146 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது எனத் தெரிவித்தார்.