தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கான புதிய திட்டமோ, பெரிய திட்டமோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை மணிக்கு தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது:
“பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. பெரிய வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கிராம சாலைகளை சீரமைக்க குறைவான நிதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துறைகளுக்கு ஒதுக்கும் நிதிகளை போலவே இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ. 8,33,361 கோடி கடன் இருக்கிறது. நிதி வரவு, செலவு அறிக்கையில் குளறுபடி உள்ளது. திமுகவின் கனவு பட்ஜெட் கானல் நீரைப் போன்றது. மக்களுக்கு பயன் தராது.
திமுக ஆட்சி கடன் வாங்கிதான் நடக்கிறது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அதிக வருமானம் வருகிறது. ஆனால், பெரிய திட்டம் அறிவிக்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி புதுமைப் பெண் திட்டம் கொண்டு வந்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.