சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் இந்த விருப்பத்தை தெரிவித்த நிலையில், ஆனால், பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறிவிட்டார்.
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே எஞ்சியுள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் சாா்பில் தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற திட்டத்தின் மூலம் திமுக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் என்று அறிவிப்பு வெளியானது.