இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: தீர்மானம் சொல்வது என்ன?

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: தீர்மானம் சொல்வது என்ன?
ashwin

தேர்தல் பரப்புரையாக இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் ஒலிக்கட்டும் என்று திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காணொலி வாயிலாக திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் - என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரும் பயன்படும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் முதல்வரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும்தனித்தனியாக, தொகுதிப் பார்வையாளர்கள், பிஎல்ஏ-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கவும், 26-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, திமுக தலைவரின் குரல் தில்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுளள்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com