அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜிகே.வாசன் இருக்கப் போகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பாஜக-தமாகா இடையே கூட்டணி உறுதியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பாஜக கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை தமாகா கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பாஜக கூட்டணியில் முதல் ஆளாக வந்திருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜிகே.வாசன் இருக்கப் போகிறார். பாரம்பரியம் மிக்க கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். பிரதமர் மோடிக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பவர் ஜி.கே.வாசன். கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். சதியால் மூப்பனார் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க முடியவில்லை. கடுஞ்சொல் பேசாதவர், வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டவர் ஜி.கே.வாசன்.
பிற கூட்டணிகளின் பலவீனம் பற்றி கவலையில்லை. எங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதே நோக்கம். பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாங்குகளை கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.